பைக் மீது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்; ஒருவர் பலி; இருவர் பலத்த காயம்;
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் பைக் மீது கார் மின்னல் வேகத்தில் மோதியதில் ஒருவர் பலியானார். இருவர் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கார் ஓட்டுநர் தப்பியோடி விட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகேயுள்ள பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த ஞானசீலன் மகன் ஜெனில்குமார் (19). தக்கலை முருகன் மகன் முரளி (16). திருவிதாங்கோடு ஐயப்பன் மகன் விஷ்ணு (18) ஆகிய மூவரும்ஒரே பைக்கில் விழுந்தயம்பலம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஜெனில்குமார் பைக்கை ஓட்டி வந்தார். தொலையாவட்டம் பகுதியில் அவர்களது பைக் மீது எதிரே வந்த கார் மின்னல் வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், மூவரும் பலத்த காயம் அடைந்தனர். இதற்கிடையில் கார் ஓட்டுநர் தப்பியோடி விட்டார்.
காயமடைந்த மூவரையும் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே ஜெனில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, முரளி, விஷ்ணு ஆகியோர்ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து கருங்கல் காவலாளர்கள் வழக்குபதிந்து, தப்பிச்சென்ற கார் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.