You can download the temporary score certificate from May 25th - Primary Education Officer ...
பெரம்பலூர்
பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் மே 25-ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என முதன்மைக் கல்வி அலுவலர் தி.அருள்மொழி தேவி தெரிவித்துள்ளார்.
முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழி தேவி செய்திக்குறிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டார்.
அந்தச் செய்திக்குறிப்பில் பின்வருமாறு குறிப்பிட்டு இருந்தார்.
“பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மே 25-ஆம் தேதியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மே 22 ஆம் தேதி மாலை 5.45 மணி வரை பள்ளி மாணவர்கள் பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பகுதி - 1 மொழி பாடத்திற்கு ரூ.305, பகுதி - 2 மொழி (ஆங்கிலம்) பாடத்திற்கு ரூ.305, பகுதி - 3 கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு ரூ.205, பகுதி - 4 விருப்ப மொழிப் பாடத்திற்கு ரூ.205 செலுத்த வேண்டும்.
மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் ரொக்கமாக செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வர்கள் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள இயலும்.
பொதுத் தேர்வில் தேர்வெழுத பதிவுசெய்து தேர்ச்சி பெறாதோருக்கும், வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத்தேர்வு ஜூன் இறுதியில் நடைபெறும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
