Yoga practice for police to solve stressed 2 days a week ...
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் மன அழுத்தத்தைப் போக்க காவலாளர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.
தஞ்சாவூர் காவல் பயிற்சி மையத்தில் திருச்சி, அரியலூர், பெரம்பலுார், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலாளர்கள் 210 பேர் ஏழு மாதங்கள் பயிற்சி பெற்றனர். இந்தப் பயிற்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
அதேபோல தஞ்சை, திருவையாறு, வல்லம் ஆகிய உட்கோட்டத்தில் 100 உதவி ஆய்வாளர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இவ்வாறு பயிற்சி முடித்த இரண்டாம் நிலை காவலாளர்கள் மற்றும் பயிற்சி பெறும் உதவி ஆய்வாளர்கள் என்று மொத்தம் 310 பேருக்கு மன அழுத்தத்தைப் போக்க யோகா பயிற்சியளிக்க தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இதனையடுத்து திருச்சியில் இருந்துவந்த யோகா பயிற்சியாளர் ராமசாமி, 310 பேருக்கு நேற்று தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் யோகா பயிற்சி அளித்தார். இந்த யோகா பயிற்சி இனி வாரந்தோறும் இரண்டு நாட்கள் நடைபெறும்.
கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவலாளர்களுக்கும் விரைவில் யோகா பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
