writer Balakumaran passed away
பிரபல எழுத்தாளரும், சினிமா வசனகர்த்தாவுமான பாலகுமாரன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71. கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி வட்டத்தில் உள்ள பழமார்நேரியில் 1946 ஆம் ஆண்டு சூலை 5 ஆம் தேதி பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர், தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். அப்போதே அவர் கவிதைகள் எழுதத் தொடங்கினார்.
பாலகுமாரன் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நாவல்களையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதி உள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும், கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே.பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.
நாயகன், குணா, ஜென்டில்மேன், பாட்ஷா உட்பட 23 படங்களுக்கு அவர் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். பாட்ஷா படத்தில் ரஜினிகாந்த் பேசும், நான் ஒரு முறை சொன்னா 100 முறை சொன்ன மாதிரி என்ற வசனம் இவர் எழுதியது. இந்த வசனம் மிகப்பெரும் வரவேற்பு பெற்றது.
இவர் எழுதிய மெர்குரி பூக்கள், இரும்புகுதிரை புகழ்பெற்ற நாவலாகும். இரும்புகுதிரை நாவல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. சில கல்லூரிகளில் இரும்புகுதிரை நாவல் பாடப்புத்தமாக இருந்தது.
