தமிழகத்தில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் - மா.பா.பாண்டியராஜன் உறுதி...
இராமநாதபுரம்
வரலாறு படிக்கும் மாணவர்களுக்கு ஆய்வுகளுக்கு பயன்படும் வகையில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம் தமிழகத்தில் அமைக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழக பண்பாட்டுத்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்தார்.
தமிழக அரசின் தொல்லியல் துறையின் சார்பில் இராமநாதபுரம் மாவட்டம், இராமலிங்க விலாசம் அரண்மனையில் உலக பராம்பரிய வாரம் கடைப்பிடிப்பதை முன்னிட்டு புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.
இந்த விழாவின் நிறைவு நாளில் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர், பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் தொல்லியல் துறையின் சார்பில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
பரிசுகள் வழங்கும் விழாவிற்கு இராமநாதபுரம் அரண்மனையின் காப்பாட்சியர் ஆசைத்தம்பி, தொன்மைப் பாதுகாப்பு மன்ற ஆசிரியர் வே.ராஜகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன், "நமது முன்னோர்களின் வரலாறுகளைத் தெரிந்து கொள்ளவே அகழாய்வுகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் அழகன்குளம், ஆதிச்சநல்லூர், கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வுகள் முக்கியமானவை ஆகும்.
இதுவரை நடத்தப்பட்ட அகழாய்வுகளில் சுமார் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய நம் மூதாதையர்கள் பயன்படுத்தியப் பொருள்களை கண்டெடுத்துள்ளோம். இந்த அகழாய்வுகள் மூலம் 24000 பொருள்கள் கண்டறியப்பட்டு அவற்றில் 11 ஆயிரம் பொருள்கள் பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் அருகே அழகன்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் மூலம் ரோமானியர்களுக்குள் சில வணிகத் தொடர்புகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே அழகன்குளத்தில் விரைவில் புதிய அருங்காட்சியம் அமைக்கப்படும்.
தமிழக அரசின் தொல்லியல் துறையின் சார்பில் 35 அருங்காட்சியகங்கள் உள்ளன. அறிவியல் பயிலுவோருக்கு ஆய்வகங்கள் இருப்பதைப்போல வரலாறு படிக்கும் மாணவர்களுக்கு ஆய்வுகளுக்கு பயன்படும் வகையில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கு நமது வரலாறு மற்றும் தொன்மைகளை அறிந்து கொள்வதற்காக அரசின் சார்பில் தொன்மைப் பாதுகாப்பு மையங்கள் நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.