அமைப்புசாரா நல வாரியத்தில் உறுப்பினர் பதிவை புதுப்பிக்க தொழிலாளர்களுக்கு ஜனவரி 31 வரை கெடு...
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைப்புசாரா நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து, பதிவை புதுப்பிக்கத் தவறிய தொழிலாளர்கள் தங்களது பதிவைப் புதுப்பிக்க ஜனவரி 31-ஆம் தேதி வரை கெடு கொடுக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் நல அலுவலர் செந்தில்குமரன் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "தமிழகத்தில் கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் நல வாரியங்கள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம், உடலுழைப்புத் தொழிலாளர் நலவாரியம், அமைப்பு சாரா ஓட்டுநர் நல வாரியம், தையல் தொழிலாளர் நல வாரியம், முடி திருத்துவோர் நல வாரியம், சலவைத் தொழிலாளர் நல வாரியம்,
பனை மரத் தொழிலாளர் நல வாரியம், காலணி, தோல் பொருள்கள் உற்பத்தி, தோல் பதனிடுதல் தொழிலாளர் நல வாரியம், ஓவியர் நல வாரியம், பொற்கொல்லர் நல வாரியம் உள்பட 17 நல வாரியங்கள் உள்ளன.
இவற்றில் தமிழகம் முழுவதும் 50 இலட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்டுமானம், அமைப்புசாரா நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து, பதிவை புதுப்பிக்கத் தவறிய தொழிலாளர்கள் தங்களது பதிவைப் புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, அடையாள அட்டை, ஆதார் எண் ஆகியவற்றை இணைத்து ஜனவரி 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து தங்களது பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.
திருவண்ணாமலை, காந்தி நகர் பகுதியில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகத்துக்குச் சென்று தொழிலாளர்கள் தங்களது பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம்" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.