woman body floated in lake in half naked tied with rock ...

ஈரோடு

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஈரோட்டில், பெண்ணை கொன்று முதுகில் பாறாங்கல் வைத்து கயிற்றால் கட்டியபடி அரை நிர்வாண நிலையில் ஏரியில் வீசிச்சென்ற கொலையாளிகளை தனிப்படை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஏரிக்கரை ஓரமாக நேற்று காலை 6 மணியளவில் அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் நடைபயிற்சி சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது ஏரியின் ஒரு பகுதியில் துர்நாற்றம் வீசியதால் உடனே மக்கள் அந்த இடத்தில் சூழ்ந்தனர்.

அங்கு தண்ணீரில் பெண் பிணம் மிதந்தது. முதுகில் பாறாங்கல் வைத்து கயிற்றால் கட்டியபடி அரை நிர்வாண நிலையில் அந்த பெண்ணின் பிணம் காணப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் இதுகுறித்து உடனே அந்தியூர் காவலாளர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து பவானி துணை காவல் கண்காணிப்பாளர் சார்லஸ், காவல் ஆய்வாளர் ரவி மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், "பிணமாக மிதந்த பெண்ணுக்கு 35 வயது இருக்கும். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால் இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம்" என்று தெரிந்தது.

பெண்ணின் காதில் அணிந்திருந்த கம்மல், தாலி, கால் கொலுசுவில் ‘ஜே.ஜே.’ என்ற ஆங்கில எழுத்தில் நகைக்கடையின் முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. ஜே.ஜே என்ற முத்திரை பொறிக்கும் நகைக்கடை அந்தியூரில் உள்ளதால், கொலை செய்யப்பட்ட பெண் அந்தியூர் பகுதியை சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்று காவலர் தரப்பில் கூறப்படுகிறது.

அரை நிர்வாண நிலையில் காணப்பட்டதால் யாராவது மர்மநபர்கள் அந்த பெண்ணை கடத்தி கொண்டுவந்து கற்பழித்துவிட்டு பிணத்தை ஏரியில் வீசி சென்றிருக்கலாம் என்றும், உடல் மேலே மிதந்துவிடக் கூடாது என்பதற்காக முதுகில் பாறாங்கல்லை வைத்து கட்டி போட்டிருக்கலாம் என்றும் பல்வேறு கோண்டத்தில் காவலர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பிணத்தை கைப்பற்றிய காவலாளர்கள் உடற்கூராய்வுக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளிகளை பிடிக்க ஆய்வாளர் ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை காவலாளர்கள் கொலையாளிகளை தீவிரமாக வலைவீசி தேடி வருகிறார்கள்.