Will we go to school? Or not? Asked by the students sitting on the road ...

மதுரை

டி.கல்லுப்பட்டியில் - திருவில்லிபுத்தூர் இடையே இயக்கப்பட்ட அரசு பேருந்து நிறுத்தப்பட்டதால், பள்ளிக்கூடம் போக முடியாமல் தவித்த மாணவர்கள் மற்றும் பணிகளுக்கு செல்ல முடியாத கிராம மக்கள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து திருவில்லிபுத்தூருக்கு நாள்தோறும் அரசு பேருந்து சென்றுவந்தது. இந்த பேருந்தினால்தான் சுப்புலாபுரம், ஏ.பாறைப்பட்டி, சின்னசிட்டுலொட்டிபட்டி ஆகிய கிராமங்களில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், கிராம மக்கள் என அனைத்து தரப்பினரும் பயனடைந்து வந்தனர்.

மேலும், இந்த பேருந்தில்தான் டி.கல்லுப்பட்டி பகுதிக்கு சென்றும் வருவார்கள். இந்த நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடந்த 15 நாள்களுக்கு மேலாக இந்த வழித்தடத்தில் சென்றுவந்த பேருந்து திடிரென நிறுத்தப்பட்டது.

இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அனைத்துத் தரப்பினரும் பெரிதும் பாதிப்படைந்தனர்.

மேலும், இந்த பேருந்து இயக்கப்படாத நிலையில், திருமங்கலம் - ராஜபாளையம் செல்லும் வழியில் உள்ள கிராம விலக்குகளில் அரசு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்ற உத்தரவு இருந்தும் அரசு பேருந்துகள் நிற்காததால், பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் என்று அனைத்து தரப்பினரும் அவதிக்கு உள்ளானார்கள்.

இந்த நிலையில் நேற்று மாணவர்கள், அந்த பகுதி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் ஒன்று கூடி நெடுஞ்சாலையில் அமர்ந்து திடிரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த மறியல் குறித்து தகவலறிந்து வந்த பேரையூர் காவலாளர்கள், வருவாய் துறையினர், போக்குவரத்து துறை அலுவலர்கள் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், "ஏ.பாறைப்பட்டி உள்ளிட்ட கிராம விலக்குகளில் பேருந்து நிறுத்தப்படும் என்றும் டி.கல்லுப்பட்டி - திருவில்லிபுத்தூர் வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட பேருந்து தொடர்ந்து இயக்கப்படும்" என்று கூறினர்.

அதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.