Wild elephants invading housing area at night time People asking protection ...

நீலகிரி

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நீலகிரியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் அப்பகுதியில் வாழும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் 65% வனப்பகுதியை கொண்டது. இது காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைப் புலிகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளின் கூடாரமாக உள்ளது. 

கூடலூர், பந்தலூர் தாலுகாவில் 1 இலட்சத்து 78 ஆயிரத்து 432 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவ்வகை நிலங்களில் அடர்ந்த வனங்களும், தேயிலை தோட்டங்களும் உள்ளன. இங்கு சமீப காலமாக காட்டு யானைகளின் அட்டகாசத்தால் மக்கள் மற்றும் விவசாயிகள் சந்தித்து பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். 

"காட்டு யானைகளுக்கு போதிய தீவனங்கள் கிடைக்காததே இதற்கு முக்கிய காராணம்" என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமின்றி, யானைகள் செல்லும் வழித்தடங்களை ஆக்கிரமிப்பது, மின்வேலிகள் அமைத்து அவற்றை கொடுமைப்படுத்துவது போன்றவற்றால் யானைகள் ஊருக்குள் நுழைந்துவிடுகின்றன என்றும் அவர்கள் கூறுகின்றனர். 

நீலகிரியில் தற்போது பலாப்பழ சீசன் நிலவுவதால் காட்டுக்குள் தீவனங்கள் கிடைக்காமல் தவிக்கும் யானைகள் தங்களது குட்டிகளுடன் ஊருக்குள் நுழைந்து குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் உள்ள பலா, கொய்யா, மா, வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்து சேதப்படுத்தியும் விடுகின்றன.

யானையை கண்டு அஞ்சி மக்களும் அதன் அருகில் செல்லமுடியாமல் பயிர்கள் சேதப்படுவதை கண்ணூடே பார்த்து அழுகின்றனர். மீறி யானைகளை விரட்ட முற்படும் மனிதர்களை, யானைகள் கொன்றுவிடுகின்றன. சில இடங்களில் காட்டு யானைகள் தாக்கப்பட்டு உயிர் இழக்கிறது. 

அதன்படி, கூடலூரை அடுத்துள்ள கோழிப்பாலம் கல்லூரி வளாகத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு தினமும் இரவு நேரத்தில் யானைகள் கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றன.

அவை, வீடுகளின் அருகே உள்ள தென்னை, பாக்கு, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி அட்டூழியத்தில் ஈடுபடுகின்றன. தொடர்ந்து இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்கு வரும் யானைகளால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். 

எனவே, யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க வேண்டும் என்றும், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.