கழுத்தை அறுத்து மனைவி கொலை...! தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்...!
குடும்பத்தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை, செங்குன்றம், சென்றம்பாக்கத்தைச் சேர்ந்தவர் டேனியல், இவர் கேஸ் ஏஜென்சி ஒன்றில் டிரைவராக பணியாற்றி வந்தார். டேனியலுக்கு அம்மு என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். டேனியல் - அம்மு இவர்களின் மூத்த மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் இறந்து விட்டார்.
இந்த நிலையில், டேனியல் மற்றும் அம்மு மன உளைச்சலில் இருந்துள்ளனர். வேலை முடித்து வீட்டுக்கு வரும் டேனியல் தினமும் குடித்து விட்டு அம்முவுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், டேனியல் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். மீண்டும் வீட்டுக்கு வந்தபோது, அம்மு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார்.
அப்போது, டேனியேல் சமையல் அறைக்கு சென்று, அங்கிருந்த கத்தியை எடுத்து வந்து, அம்முவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதன் பின்னர், படுக்கை அறையில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் டேனியல்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், உடல்களைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.