சேர்ந்து வாழ பலமுறை அழைத்தும் வராததால் மனைவிக்கு சரமாரி வெட்டு; இரண்டாவது கணவர் வெறித்தனம்...
திருப்பூர்
திருப்பூரில், சேர்ந்து வாழ பல முறை அழைத்தும் சம்மதிக்காததால் ஆத்திரமடைந்த இரண்டாவது கணவர் மனைவியை சரமாரியாக வெட்டிவிட்டு தலைமறைவானார். அவரை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு நேசமணி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(50). இவருடைய மனைவி தங்கம்மாள் (45). இவர்களுக்கு கீர்த்தனா, நந்தினி என இரண்டு மகள்கள் உள்ளனர்.
தங்கம்மாளுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது தங்கம்மாளின் இரண்டு மகள்களும் திருமணம் முடிந்து அவர்கள் திருப்பூர் முத்தையன் நகர் மேற்கு பகுதியில் குடும்பத்துடன் வாழ்கின்றனர்.
தங்கம்மாள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரத்தைச் சேர்ந்த பொன்னையா என்கிற பாண்டி(46) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு தூத்துக்குடியில் குடியிருந்து வந்துள்ளார்.
பின்னர், அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட தங்கம்மாள் கடந்த இரண்டு மாதமாக திருப்பூர் முத்தையன் நகரில் உள்ள தனது மகள்கள் வீட்டில் தங்கியிருந்து கட்டிட வேலைக்குச் சென்று வந்துள்ளார்.
பொன்னையாவும் திருப்பூர் வந்து கல்லாங்காட்டில் தங்கி இருந்துள்ளார். தன்னுடன் சேர்ந்து குடும்பம் நடத்த வருமாறு தங்கம்மாளை, பொன்னையா பலமுறை அழைத்துள்ளாராம். ஆனால், தங்கம்மாள் அவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று கூறி மகள்கள் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இந்த நிலையில், வழக்கம்போல கட்டிட வேலைக்காக தங்கம்மாள் நேற்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு ராமையா கௌண்டர் லே அவுட் வழியாக நடந்துச் சென்றுள்ளார். அவருடன் வேலை செய்யும் சித்ரா என்ற பெண்ணும் உடன் சென்றுள்ளார்.
அந்த நேரத்தில் தங்கம்மாளை பின்தொடர்ந்த வந்த பொன்னை, தங்கம்மாளை வழிமறித்த தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்துள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் கோபமடைந்த பொன்னையா தான் வைத்திருந்த அரிவாளை எடுத்து தங்கம்மாளின் கழுத்தில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு நடுரோட்டில் இரத்த வெள்ளத்தில் தங்கம்மாள் கிடந்தார்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தங்கம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் கயல்விழி, உதவி ஆணையர் தங்கவேல், தெற்கு காவல் ஆவ்யாளர்கள் நெல்சன், தென்னரசன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவாக உள்ள பொன்னையாவை பிடிப்பதற்கு இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தூத்துக்குடி, இராமநாதபுரம் விரைந்துள்ளது.