“சரக்கு அடிச்சிட்டு வந்த கணவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு” - செலவுக்கு பணம் தராததால் மனைவி ஆத்திரம்
குடும்ப செலவுக்கு பணம் தராமல், மது குடித்துவிட்டு வந்த கணவனை, மனைவி அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ராமசமுத்திரம் ஊராட்சி கோணிகாரகுப்பம் கிராமம் அருந்ததி காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணி (55). கூலி தொழிலாளி. இவரது மனைவி மணியம்மாள் (45). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 3 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.
சுப்பிரமணிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், தினமும் வேலைக்கு செல்லும் சுப்பிரமணி, வீடு திரும்பும்போது மது குடித்துவிட்டு வருவதாக தெரிகிறது. இதையொட்டி குடும்ப செலவுக்கு பணம் தருவில்லை.
இதையொட்டி, அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது. மேலும், மது குடிப்பதை மனைவி மணியம்மாள் தட்டிக் கேட்பதால், சுப்பிரமணி அடித்து உதைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை சுப்பிரமணி குடும்ப செலவுக்கு பணம் தராமல் வெளியே சென்றார். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினார். அப்போது, மது அருந்திவிட்டு போதையில் இருந்தார். இதனால் மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில், சுப்பிரமணி, மனைவியை சரமாரியாக தாக்கினார்.
இதனால் ஆத்திரமடைந்த மணியம்மாள், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கணவர் சுப்பிரமணியை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு முகம், கை, உதடு ஆகிய பகுதிகளில் பலத்த வெட்டு விழுந்தது. அவர் படுகாயமடைந்து அலறி துடித்தார்.
தகவலறிந்து பொதட்டூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த சுப்பிரமணியை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியம்மாளை கைது செய்தனர். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.