Asianet News TamilAsianet News Tamil

அரசு பேருந்து மீது வேன் மோதியதில் கணவன், மனைவி இறப்பு; நால்வருக்கு பலத்த காயம்....

Wife and husband die in van accident Four hurt to seriously....
Wife and husband die in van accident Four hurt to seriously....
Author
First Published Feb 21, 2018, 10:20 AM IST


திருப்பூர்

திருப்பூரில் நின்றுக் கொண்டிருந்த அரசு பேருந்து மீது வேன் மோதியதில் வயதான கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நால்வர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பெரியகட்டளையைச் சேர்ந்தவர் சின்னக்கருப்பன் (65). இவருடைய மனைவி பழனியம்மாள் (60). இவர்களது மகன் ரமேஷ் (30), இவருடைய மனைவி ஜெயக்கனி (25). இவர்களுடைய மகள் ஹேமா (4), மகன் அகிலேஷ் (3).

ரமேஷ் தற்போது திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பழையகோட்டை சாலையில் முறுக்கு மற்றும் சிப்ஸ் தயாரித்து வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுடன் ரமேசின் பெற்றோர் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், தங்களது சொந்த ஊரான உசிலம்பட்டி பெரியகட்டளையில் நடந்த தங்களது உறவினரின் இல்ல காதணி விழாவில் பங்கேற்க ரமேஷ் தனது குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் கடந்த 18-ஆம் தேதி இரவு வேனில் சென்றுவிட்டு நேற்று காங்கேயத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வேனை கணேஷ் (28) என்பவர் ஓட்டினார்.

நேற்று மதியம் 1 மணியளவில் ஒட்டன்சத்திரம் - தாராபுரம் சாலையில் வேன் வந்து கொண்டிருந்தபோது அந்த சாலையில் கோனேரிபட்டியில் உள்ள பாதவிநாயகர் கோவில் பேருந்து நிறுத்தத்தில் ஒரு அரசு பேருந்து நின்று கொண்டிருந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் அங்கு நின்றிருந்த அந்த அரசு பேருந்தின் பின் பகுதியில் கணேஷ் ஓட்டிச்சென்ற வேன் மோதியது. இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் சின்னக்கருப்பன் மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் ரமேஷ் அவருடைய மனைவி ஜெயக்கனி, மகள் ஹேமா, வேனை ஓட்டி வந்த கணேஷ் ஆகிய நால்வரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மூலனூர் காவல் ஆய்வாளர் மற்றும் காவலாளர்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான சின்னக்கருப்பன், பழனியம்மாள் ஆகியோரின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் சிறுவன் அகிலேஷ் காயமின்றி உயிர் தப்பினான். படுகாயம் அடைந்த நால்வரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

படுகாயம் அடைந்த 4 பேரில் சிறுமி ஹேமா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த விபத்து குறித்து மூலனூர் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios