Why do not a separate bus run for school students?
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக தனி பேருந்து இயக்காதது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து தமிழக அரசு மற்றும் மாநகர போக்குவரத்து கழகம் நாளை பதிலளிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீக் அவர்ஸ் எனப்படும் பள்ளி-கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் நேரங்களில் பேருந்துகளில் கடும் நெரிசல் காணப்படுகிறது. இதனால், பல உயிரிழப்புகள் ஏற்பட்டும் வருகின்றன. பேருந்து நாள் என்று கூறி மாணவர்கள், பேருந்து கூரையின் மீது ஏறியும் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன.

பீக் அவர்ஸின்போது, கூட்டம் காரணமாக பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு செல்லும் அவலம் ஏற்படுகிறது. இதில் பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களே தொங்கிக் கொண்டு செல்கின்றனர்.
இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் பொதுநல மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிமன்றம், பேருந்து படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதை தடுக்க மாணவர்களுக்கு தனியாக பேருந்து இயக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் மாநகர போக்குவரத்து கழகம் நாளை பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, இந்த வழக்கை ஒத்தி வைத்தது.
