போட்டியில் பல மாநிலங்கள்; ஓலா தேர்வு செய்தது தமிழ்நாடு; பின்னணி என்ன?
உலகின் மிகப்பெரிய மின்சார வாகன தயாரிப்பு மையத்தை ஓலா எலக்ட்ரிக் தமிழகத்தில் அமைக்கிறது. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் இதற்கு போட்டியிட்டு இருந்தாலும், ஓலா எதற்காக தமிழ்நாட்டை தேர்வு செய்தது என்று பார்ப்போம்.
ஏற்கனவே மின்சார இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஓலாவும் தனது நிறுவனத்தை இந்த மாவட்டத்தில் நிறுவுகிறது. மின்சார கார்களை தயாரிக்க ரூ. 7,614 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டுக்கும், ஓலா நிறுவனத்துக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனியார் சேனலுக்கு அளித்திருக்கும் பேட்டியில், ''நில மானியம் மற்றும் மின் கட்டண பலன்களைத் தவிர, மின்சார வாகன தயாரிப்பாளருக்கு மூலதனம் அல்லது விற்றுமுதல் மானியத்தை தேர்வு செய்வதற்கு மாநில அரசு மானியம் வழங்குகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
உபகரண உற்பத்தி மற்றும் பேட்டரி உற்பத்தியாளர்கள் மற்றும் பயனர்களுக்கு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான வசதிகளையும் அரசு வழங்கியுள்ளது. உதாரணமாக, இந்த பொது மின்சார வாகன பயனாளர்களுக்கு ரூ. 10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
"தமிழ்நாட்டின் எலெக்ட்ரிக் வாகனக் கொள்கை சமீபத்தில் தற்போதைய நடைமுறைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் ஈட்டித் தரும் வகையில் அமைந்துள்ளது" என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்ட மின்சார வாகனக் கொள்கை 2023 ஐ வெளியிட்டது. மின்சார வாகன தொழில்துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் ரூ. 50,000 கோடி முதலீடுகளை கொண்டு வரவும், 1.50 லட்சம் வேலைகளை உருவாக்கும் வகையிலும் கொள்கை மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
வாகன உற்பத்தியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை லட்சம் கார்களை உற்பத்தி செய்து 3,000க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு துவக்கத்தில் பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பல முதலீடுகள் காத்திருக்கின்றன. சாம்சங் உள்ளிட்ட பிற முதலீட்டாளர்கள் தங்கள் விரிவாக்கத்திற்காக தமிழகத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை திருத்தம்:
மூலதனத்தில் மானியம் வழங்குதல், மாநில சரக்கு மற்றும் சேவை வரி (எஸ்ஜிஎஸ்டி) ஆகியவை திரும்பப் பெறுதல், விற்றுமுதல் அடிப்படையில் மானியம் வழங்குதல் புதிய கொள்கையில் மாற்றத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இத்துடன், பொது மற்றும் வணிகப் போக்குவரத்தை மின்சார மயமாக்குதல், மின்சாரம் சார்ந்த வாகன நகரங்களை உருவாக்குதல் ஆகியவையும் தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023ல் இடம் பெற்றுள்ளன.
பல்கலைக்கழகங்களை மதவெறி கூடங்களாக மாற்றிய ஆர்எஸ்எஸ்.! மனித குலத்திற்கு எதிரானவர்கள்- சீமான்
சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் முதற்கட்டமாக இ-மொபிலிட்டி எனப்படும் மின்சார வாகன நகரங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. ஹைபிரிட் வாகன தயாரிப்புகளுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹைபிரிட் வாகனங்களை உற்பத்தி செய்வோருக்கும் சலுகைகள் கிடைக்கும்.
வணிக வாகனங்களுக்கு பேட்டரி திறன், வாகன வகையின் அடிப்படையில் ரூ.5,000 முதல் ரூ.10 லட்சம் வரை தமிழக அரசு சலுகைகளை அறிவித்துள்ளது. புதிய மின்சார வாகன கொள்கையின்படி சார்ஜிங் மற்றும் பேட்டரி மாற்றும் நிலையங்களுக்கு சலுகைகள் வழங்கப்படும். இத்துடன், பெட்ரோல் வாகனங்களில் இருந்து மின்சார வாகனங்களுக்கு மாறுவோருக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான திருத்தங்களை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது.