பணம் மாற்றும்போது இறந்தவர்களைப் பற்றி மத்திய அரசு பேசுவதில்லை…
பணம் மாற்ற வங்கிக்குச் சென்றபோது, இறந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களைப் பற்றி மத்திய அரசோ, மத்திய அமைச்சர்களோ பேசுவதில்லை என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் வலியுறுத்தினார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை இரா.முத்தரசன் அளித்த பேட்டி: “வர்தா புயலால் சென்னை நகரம் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. 7 ஆயிரம் மரங்கள், 10 ஆயிரம் மின்கம்பங்கள் முறிந்ததாக தமிழக அரசு சொல்கிறது. மத்திய அரசு உடனடியாக நிவாரண நிதி வழங்க வேண்டும். சேதங்களைப் பார்வையிட மத்திய அரசு குழுவை அனுப்ப வேண்டும்.
வடகிழக்குப் பருவமழை பொய்த்ததால் காவிரி டெல்டா விவசாயிகள் பாதிப்படைந்து உள்ளனர். மேலும், மக்களுக்கு குடிநீர்ப் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது.
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 30 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 இலட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். நெற்பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் ரூபாய் வழங்கி, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பாமர மக்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பாதிக்கப்படவில்லை. கருப்புப் பணம் வைத்திருப்பவர்களிடம் தற்போது புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருக்கிறது.
பணம் மாற்ற வங்கிக்குச் சென்ற நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். அவர்களைப் பற்றி மத்திய அரசோ, மத்திய அமைச்சர்களோ பேசுவதில்லை.
ஜெயலலிதா மறைவு அதிமுகவுக்கு பலவீனம்தான். ஆனால், அவர் மறைவால் வெற்றிடம் ஏற்படவில்லை என்றார் அவர்.