லாரியை முந்தி செல்ல முயன்றபோது பேருந்து மோதியதில் பைக்கில் சென்றவர் பலி; இருவர் பலத்த காயம்...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் லாரியை முந்தி செல்ல முயன்றபோது பேருந்து மோதியதில் மோட்டார் சைக்கிள் சென்ற மூவரில் ஒருவர் பலியானார். இருவர் பலத்த காயத்தோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்த விட்டிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் நேதாஜி (18). இவர் புதுப்பட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை தனது நண்பர்கள் விக்னேஷ் (16), கோவர்த்தன் (16) ஆகியோருடன் புதுப்பட்டினம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தார்.
பின்னர், அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மூன்று பேரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். விட்டிலாபுரம் சந்திப்பு அருகே வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை இவர்கள் முந்தி செல்ல முயன்றனர்.
அப்போது, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த அரசு பேருந்து மோட்டர் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மூவரும் தூக்கி வீசப்பட்டனர். மோட்டார் சைக்கிள் பலத்த சேதம் அடைந்தது.
இந்த விபத்து குறித்த தகவலறிந்த கல்பாக்கம் காவல் ஆய்வாளர் கண்ணையன் விரைந்து வந்து மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி நேதாஜி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.