What is the difference between an educated Illiterate - volley doctors question the public
உயிரை பாதுக்காக்கும் பொறுப்பில் இருக்கும் மருத்துவர்கள் நியாயமின்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது எனவும், மருத்துவர்க்களுக்கு மருத்துவமட்டுமன்றி கருணையையும் கற்றுத்தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் ஒருவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த மருத்துவரை மாணவரின் உறவினர்கள் தாக்கியதாக தெரிகிறது.
இதுகுறித்து அறிந்த சக மருத்துவர்கள் பணியை புறக்கணித்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டிருந்த ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சுதாகர் என்பவர் சிகிச்சை அளிக்க ஆளின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து மருத்துவர்களின் இந்த அநாகரீக செயலை கண்டு நோயாளிகள் அதிர்ப்தியில் ஆழ்ந்துள்ளனர்.
இறந்தவர் உயிரை மருத்துவரால் திரும்பி கொடுக்க முடியுமா? படித்தவருக்கும் படிக்காதவருக்கும் என்ன வித்தியாசம் என்று பொதுமக்கள் சரமாரி கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் பணியை புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மருத்துவமனைக்குள் எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை உருவாகி வருகிறது.
இந்த அசாதாரண சூழ்நிலையில் பரபரப்பை தவிர்க்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அநியாயமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை அப்புறப்படுத்தாமல் நியாயமாக கோரிக்கை விடுக்கும் மக்களையே போலீசார் அப்புறப் படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் மருத்துவர்கள் மனிதாபிமானம் இன்றி நடந்து கொள்வதா? உயிரை காக்க வேண்டிய மருத்துவர்களே உயிர் பிரிய காரணமாக இருப்பதா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
