வைகை பராமரிப்பில் தற்போதைய நிலை என்ன? ஆட்சியர், மாநகராட்சி ஆணையரிடம் அறிக்கை கேட்டது மதுரை நீதிமன்றம்...
மதுரை
வைகையைப் பராமரிப்பதில் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை போட்டுள்ளார்.
அந்த மனுவில், "வைகை ஆறு முறையான பராமரிப்பு இல்லாததால் மாசடைந்துள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. இதோடு வைகை ஆற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்துள்ளன.
எனவ, வைகை மாசடைவதைத் தடுக்க நிரந்தரக் கண்காணிப்புக் குழு அமைக்க உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மதுரை மாநகராட்சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், "வைகையைப் பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும். விதிகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.32 இலட்சத்து 60 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது" என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், "வைகையைப் பராமரிப்பதில் தற்போதுள்ள நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிடுகிறேன்" என்று கூறி விசாரணையை பிப்ரவரி 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.