What are the punishments for police who shoot? Jacko - geo
திருவள்ளூர்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நேற்று திருவள்ளூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் தலைமை தாங்கினார்.
இதில், "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 100 நாள்களாக அமைதியான முறையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மே 22-ஆம் தேதி மக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்து, பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இச்சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்,
இதில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்,
உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்,
தூத்துக்குடியில் அமைதியான சூழ்நிலை மீண்டும் திரும்புவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் இளங்கோவன், குப்புசாமி, ஜம்பு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
