நலத்திட்ட உதவிகளை வழங்கி, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் அசத்தல்…
நாமக்கல் மாவட்டத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 87 பேருக்கு ரூ.44 ஆயிரத்து 240 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியர் ஆசியா மரியம் அசத்தினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தலைமை வகித்தார். கூட்டத்தில், பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று உரிய அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்தக் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை கேட்டும், குடிசை மாற்று வாரியத்தில் வீடு வேண்டியும், புதிய குடும்ப அட்டை கேட்டும், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வேண்டியும், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும் மொத்தம் 452 மனுக்கள் பெறப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில் கொடிநாள் நிதி வசூல் இலக்கினை எய்திய 45 துறை அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் வெள்ளிப் பதக்கங்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 8 பெண்களுக்கு ரூ.26 ஆயிரத்து 840 மதிப்பிலான இலவச தையல் எந்திரங்களையும் ஆட்சியர் ஆசியா மரியம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து தரைதளத்தில் மாற்றுத் திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்ற அவர் மூன்று மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.17 ஆயிரத்து 400 மதிப்பிலான சக்கர நாற்காலிகளையும், 31 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளையும் வழங்கினார்.
மொத்தமாக நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 87 பயனாளிகளுக்கு ரூ.44 ஆயிரத்து 240 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கினார்.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பாலச்சந்திரன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் கணேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் முரளிகிருஷ்ணன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.