வணிகர்கள் ஸ்வைப் மெஷின் பயன்படுத்துங்கனு நாங்கள் அப்போதே கூறினோம். ஆனால், செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பிறகு இப்போது, வணிகர்களே வங்கிகளில் வந்து ஸ்வைப் மெஷின் கேட்கிறார்கள் என்று கனரா வங்கி பொது மேலாளர் வேலுச்சாமி தெரிவித்தார்.

தேனி, தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் கனரா வங்கி சார்பில் 'பழைய ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்கம்' குறித்த கலந்துரையாடல் நடந்தது.

இதில் கனரா வங்கி பொது மேலாளர் வேலுச்சாமி பேசினார்.

அவர் “பழைய ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழந்ததால் தேனி மாவட்டத்தில் வங்கிகளில் இருந்த கூட்டம் குறைந்து வருகிறது. மிக விரைவில் நிலைமை சரியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் 80 கோடிபேர் அலைபேசி பயன்படுத்துகின்றனர். சாதாரண அலைபேசியில்கூட பண பரிவர்த்தனைகள் செய்ய முடியும்.

முன்னரே வணிக நிறுவனங்களை 'ஸ்வைப்' மெஷின் பயன்படுத்த வலியுறுத்தினோம். அப்போது வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இந்த அறிவிப்புக்கு பின்னர் இப்போது வணிகர்கள் 'ஸ்வைப்' மெஷின் கேட்கின்றனர்.

மின்னணு பண பரிவர்த்தனைகள் இருந்தால் அவைகள் வங்கி கணக்கிற்கு வந்து
விடும்.

இம்மாவட்டத்தில் 25 கனரா வங்கி கிளைகள் செயல்படுகின்றன. இங்கு 75 கோடி ரூபாய் 'டிபாசிட்' பெற்றுள்ளோம். விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் 1500 கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளோம்.

அலைபேசி பரிவர்த்தனைகள் செய்து கொண்டால் இரவு ஒரு மணிக்கு கூட 50 ஆயிரம் வரை அனுப்ப முடியும். மைக்ரோ ஏ.டி.எம். மூலம் மக்கள் சிரமங்களை குறைக்க நடவடிக்கை தீவிரப்படுத்தி உள்ளோம்” என்று கூறினார்.