40 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருக்கும் குட்டையை நாங்களே தூர்வாரிக்கிறோம், நீங்கள் அனுமதி மட்டும் கொடுங்கள் போதும் – ஆட்சியரிடத்தில் மக்கள் மனு…
திருப்பூர்
திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 40 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருக்கும் குட்டையால் தாங்கள் பாதிக்கபடுவதால் நாங்களே அதனை தூர்வாரிக் கொள்கிறோம். அதற்கு ஆட்சியர் அனுமதி அளிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை ஆட்சியரிடம் கொடுத்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், “பல்லடம் அண்ணாநகர் குட்டை கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் உள்ளது.
இதனால் அந்தக் குட்டையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.
எனவே இந்த குட்டையை தூர்வார மக்களாகிய நாங்கள் முடிவு செய்துள்ளோம். எனவே மாவட்ட ஆட்சியர் இதற்கு அனுமதி அளிக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று, பல்லடம் கரைப்புதூர் ஊராட்சி குன்னங்கல்பாளையம் சிவன்மலை ஆண்டவர்நகர் பகுதி மக்கள் கொடுத்த மனுவில் ‘‘எங்கள் பகுதியில் 400–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. எங்கள் கிராமங்களை சுற்றி இயங்கி வரும் சாயப் பட்டறைகளில் பாய்லர் பயன்படுத்தப்படுகின்றன.
அந்த பாய்லரை உபயோகிப்பதற்காக நிலக்கரியை எரிக்கின்றனர். அப்போது வரும் புகையை முறைப்படி வெளியேற்றுவதில்லை. இதனால் காற்று மாசுபடுகிறது. அத்துடன் மக்களுக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் மக்கள் சுவாசிக்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.
எனவே, இந்த நிறுவனங்களில் நிலக்கரி பயன்படுத்துவதை தடை விதிக்க வேண்டும். பாய்லர் எரியூட்டுவதற்காக மரக் கட்டைகளை பயன்படுத்த ஆணையிட வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.
தமிழ்நாடு தியாகி குமரன் பொது தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த மனுவில் ‘‘பல்லடம் அறிவொளிநகர் பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளது. நெருக்கடியான நிலையில் உள்ள இந்தக் கட்டிடத்திற்கு 150–க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கிறார்கள்.
எனவே, இங்கு புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு நில அளவை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவும், காலதாமதமின்றி குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.