We need to pay the insurance payable to us immediately - to appeal to the farmers authorities ...

தஞ்சாவூர்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எங்களுக்குச் சேர வேண்டிய பயிர்க் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் என்று தஞ்சாவூர் ஆட்சியரிடத்தில் விவசாயிகள் முறையிட்டனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் அண்ணாதுரை தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கொண்டுவந்து கொடுத்தனர்.

தஞ்சாவூரை அடுத்த ஆலக்குடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அசோகன் தலைமையில் மனு ஒன்றைக் கொடுத்தனர்.

அதில், “ஆலக்குடி கிராமத்தில் 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறோம். கடந்த ஆறு வருடங்களாக குறுவை சாகுபடியை இழந்து விட்டோம்.

கடந்த ஆண்டு காவிரி ஆற்று நீரை நம்பி சம்பா நடவு செய்தோம். தண்ணீர் இல்லாததால் சாகுபடி பாதிப்பு அடைந்தது. குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது.

எங்கள் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பணம் செலுத்தி இருந்தோம். வறட்சியால் பயிர்கள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து நிவாரணம் கோரி இருந்தோம். ஆனால் இதுவரை பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.

கேட்டால் வங்கி கணக்கில் ஏறிவிடும். பணம் செலுத்திவிடுவோம் என்று பலமாதங்களாக கூறி வருகிறார்கள்.

தற்போது ஆற்றில் தண்ணீர் வந்துள்ளது. இந்தாண்டு விவசாயம் செய்ய தயார் நிலையில் உள்ளோம். ஆனால், பணம் இல்லாததால் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே, எங்களுக்குச் சேர வேண்டிய பயிர்க் காப்பீட்டு தொகையை உடனே வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இல்லையென்றால் நாங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று கூறியிருந்தனர்.