எம்.எல்.ஏ.க்களை மறைத்து வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது – டிடிவி-க்கு திண்டுக்கல் சீனிவாசன் பதிலடி…
திண்டுக்கல்
எம்.எல்.ஏ.க்களை மறைத்து வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், டி.டி.வி தினகரனுக்கு பதிலளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த ஒரு கோவில் திருவிழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பங்கேற்றார்.
விழா முடிந்த பின்னர் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில், “நாங்கள் எம்.எல்.ஏ.க்களை மறைத்து வைத்திருப்பதாக மேலூர் கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறார். அதற்கு அவசியம் இல்லை.
அனைவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கிறோம். ஜெயலலிதா வழியில் வந்த அனைவரும் சேவகர்களாகத்தான் நடந்து வருகிறோம். எங்களிடம் எஜமானர் போக்கு கிடையாது. இது எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றாக தெரியும்.
எங்கள் மடியில் கனம் இல்லை. விரைவில் எல்லாவற்றுக்கும் தீர்வு பிறந்து நல்லது நடக்கும்” என்று அவர் கூறினார்.