அரசு இந்த வேலையை செய்யாததால்தான் எங்களுக்கு இந்த அவலமே! வேதனையில் விவசாயிகள்...
தஞ்சாவூர்
நேரடி கொள்முதல் நிலையங்களை அரசு திறக்காததால் நெல் மூட்டைகளை தனியாருக்கு குறைந்த விலைக்கு விற்கும் அவல நிலையில் தள்ளப்பட்டுள்ளோம் என்று வேதனை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ளன மேலையூர், பவுண்டரீகபுரம் ஆகிய கிராமங்கள். இந்தப் பகுதிகளில் காவிரி தண்ணீர் வராததால் விவசாயம் செய்வதையே சிலர் கைவிட்டுவிட்டனர்.
இந்த நிலையில், கடன்பெற்று பம்பு செட் மூலம் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் கோடை நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டனர். சாகுபடி முடிந்து தற்போது அறுவடை பணி நடைபெற்று வருகிறது.
"நெல் மூட்டைகளை பாதுகாக்க இடமில்லாததாலும், அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்காததாலும் தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யவேண்டிய அவல நிலையில் தள்ளப்பட்டுள்ளோம்" என்று இவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஒரு மாதத்திற்கு முன்பே விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம், "கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்து மனுவும் கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், "திருவிடைமருதூர் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்"என்று வலியுறுத்தி மேலையூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தன்னெழுச்சிப் போராட்டமாக நடைப்பெற்ற இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.