We do not open a lingerie shop Authorized writing officers People win the fight

கடலூர்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடலூரில் திறக்கப்பட புதிய டாஸ்மாக் சாராயக் கடையை அடித்து நொறுக்கி போராட்டம் நடத்திய மக்களிடம், சாராயக் கடையை திறக்க மாட்டோம் என்று அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தனர். இதனால், போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தது என்று மக்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் உள்ள அனைத்து டாஸ்மாக் சாராயக் கடைகளையும் மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த அனைத்து டாஸ்மாக் சாராயக் கடைகளும் அதிரடியாக மூடப்பட்டன.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் 124 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து மூடப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடைகளுக்கு பதிலாக குடியிருப்பு பகுதிக்குள் கடை அமைக்க டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறுப் போராட்டங்களை நடத்தினர். இதன் காரணமாக குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் சாராயக் கடைகள் அமைக்க இருந்த திட்டம் கைவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் தனியார் நிலத்தில் டாஸ்மாக் சாராயக் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் புவனகிரி - குறிஞ்சிப்பாடி சாலையில் வடக்குதிட்டை கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த புதிய டாஸ்மாக் சாராயக் கடையை கிராம மக்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர்.

இது குறித்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் மோகன் தலைமையிலான காவலாளர்களும், டாஸ்மாக் சாராயக் கடை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிராம மக்கள், “டாஸ்மாக் சாராயக் கடை அமைந்தால் மாணவ, மாணவிகள், கிராம மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும்” என்று கூறினர்.

உடனே டாஸ்மாக் சாராயக் கடை அதிகாரிகள், இந்த இடத்தில் டாஸ்மாக் கடையை திறக்கமாட்டோம் என்றனர்.

அதற்கு கிராம மக்கள், காவலாளர்கள் முன்னிலையில் இங்கு டாஸ்மாக் சாராயக் கடை அமைக்க மாட்டோம் என்று அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தால்தான் கலைந்து செல்வோம். இல்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

இதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தனர். இதை ஏற்றுக்கொண்டு கிராம மக்களும் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.