இப்போ கிடைக்கும் சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்த முடியல – ஊதிய உயர்வு கேட்கும் துப்புரவுத் தொழிலாளர்கள்…
அரியலூர்
தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று துப்புரவுத் தொழிலாளர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்
அரியலூர் மாவட்டம், செயங்கொண்டம் நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் க.இலட்சுமி பிரியாவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், “செயங்கொண்டம் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை ஊதியம் உயர்த்தப்படவில்லை.
தொழிலாளர்கள் வைப்பு நிதிக்கு பிடித்தம் செய்யப்படும் தொகை தொழிலாளர்களின் பெயர்களில் வரவு வைக்கப்படவில்லை.
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியத் தொகையைக் கொண்டு குடும்பம் நடத்த முடியவில்லை. பிள்ளைகளுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியவில்லை.
எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக ஊதியத்தை உயர்த்தவும், வைப்பு நிதிக்காகப் பிடித்தம் செய்யப்பட்ட தொகையைத் தொழிலாளர்களின் பெயர்களில் வரவு வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் தெரிவித்து இருந்தனர்.
அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் க.இலட்சுமி பிரியா இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.