we are the real admk - OPS
பெரம்பலூர்
உண்மையான அதிமுக நாங்கள் தான் என்றும் இரட்டை இலைச் சின்னம் எங்களுக்கே என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இருந்தபோது ஒற்றுமையாக இருந்த அதிமுகவை தான் மக்கள் விரும்புகிறார்கள் என்பதை மறந்துவிட்டார் போலும்.
எங்கள் நிபந்தனைகளை ஏற்றால் இரு அணிகளும் இணையும் என்று பெரம்பலூரில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பெரம்பலூருக்கு வந்த ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், “டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க.வை வழிநடத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அதிமுகவை ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக வளர்த்து 45 ஆண்டுகாலம் வழிநடத்தி சென்றுள்ளார்கள்.
கட்சியை யார் வழிநடத்தி செல்ல வேண்டும் என்பதை ஒன்றரை கோடி தொண்டர்கள் முடிவெடுக்க வேண்டும். அதிமுக தனிப்பட்ட குடும்பத்தின் ஆதிக்கத்தில் உள்ள இயக்கமாக மாறி விடக்கூடாது.
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை விசாரிக்க நீதி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்பதே எங்களது தர்மயுத்தத்தின் நோக்கம் ஆகும். இந்த நிபந்தனைகள் நிறைவேறும் பட்சத்தில் இரு அணிகளும் இணையும்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மௌனமாக இருப்பதாக கூறுகிறீர்கள். அது ஏன்? என்று அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்.
தினகரனை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு மட்டும் உள்ளதாக கூறுகிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்வு முறைகளுக்கு உட்பட்டது. சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதே தவறாகும். இதையே இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஆணித்தரமாக, உரிய ஆதாரங்களுடன் முறையிட்டுள்ளோம். தேர்தல் ஆணையமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
உண்மையான அதிமுக நாங்கள் தான். இரட்டை இலை சின்னமும் எங்களுக்கே என்ற சாதகமான தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இந்தப் பேட்டியின்போது பெரம்பலூர் எம்.பி. மருதராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
