தண்ணீர் தேடிவந்த கடமானுக்கு நேர்ந்த சோகம்; கிணற்றில் விழுந்து பறிதவிப்பு...
தேனி
தேனியில், கடமலைக்குண்டு அருகே தண்ணீர் தேடிவந்த பெண் கடமான் ஒன்று கிணற்றுக்குள் தவறு விழுந்து பறிதவித்தது. சுமார் இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகு கடமான் உயிருடன் மீட்கப்பட்டது.
தேனி மாவட்டம், கடமலை - மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு அருகே டாணாதோட்டம் மலைப் பகுதியில் கடமான்கள் அதிகளவில் உள்ளன.
இந்த மலைப் பகுதியில் போதிய மழை இல்லாததால் மலைப் பகுதியில் உள்ள குளம் உள்ளிட்டவற்றில் தண்ணீர் வற்றிவிட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக கடமான்கள் இரவு நேரங்களில் குடிநீரை தேடி அருகில் உள்ள தோட்டப் பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன.
நேற்று காலை 6 மணியளவில் தண்ணீர் தேடி டாணாதோட்டம் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு வந்த பெண் கடமான் ஒன்று அருகில் இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டது.
மறுநாள் காலை இதனைக் கண்ட விவசாயிகள் உடனடியாக கண்டமனூர் வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். வனச்சரகர் குமரேசன் உத்தரவின்பேரில் வனவர் சோனைமுத்து உள்ளிட்ட வனத்துறையினர் டாணாதோட்டம் பகுதிக்கு சென்று கிணற்றில் விழுந்த கடமானை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கிணறு மிகவும் ஆழமாக இருந்ததால் கடமானை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து கடமலைக்குண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் டாணாதோட்டம் பகுதிக்கு வந்த வீரர்கள் வனத்துறையினருடன் சேர்ந்து கடமானை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்பு கிணற்றில் விழுந்த கடமானின் உடலில் கயிறை கட்டி மேலே தூக்கி வந்தனர். பின்னர், மீட்கப்பட்ட கடமானுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அருகில் இருந்த மலைப்பகுதியில் கொண்டுசென்று விட்டனர்.
"மழை இல்லாத நேரங்களில் டாணாதோட்டம் மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வரும் கடமான்கள் கிணற்றுக்குள் விழுவதும், சாலையை கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதும் கடந்த சில வருடங்களாக தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.
எனவே, இதுபோன்ற சம்பவங்களை தடுக்க சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மலைப்பகுதியில் மான்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளில் தொட்டிகள் அமைத்து அதில் தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும்" என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.