வெளுத்து வாங்கும் மழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரத்து 280 மில்லியன் கன அடியாக அதிகரிப்பு;
காஞ்சிபுரம்
புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கும் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்வரத்து 280 மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளது.
சென்னை அருகே உள்ள பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளில் இருந்து வரும் நீர் மூலம் சென்னை மாநகரின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
பருவமழை சரியாகப் பெய்யாததால் ஏரிகள் வறண்டன. இருப்பினும் கல்குவாரி தண்ணீர், நெய்வேலி சுரங்க தண்ணீர், கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மற்றும் விவசாய கிணறுகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் நிலைமை ஓரளவு சமாளிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக சென்னை புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
பூண்டி ஏரியில் நேற்றைய நிலவரப்படி 24 மில்லியன் கன அடி, சோழவரம் ஏரியில் 21 மில்லியன் கன அடி, புழல் ஏரியில் 73 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கத்தில் 162 மில்லியன் கன அடி உள்பட 4 ஏரிகளிலும் சேர்ந்து தற்போது 280 மில்லியன் கன அடி மட்டும் நீர் உள்ளது.
புழல் ஏரிக்கு விநாடிக்கு 33 கன அடி நீரும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 17 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது.
அதேபோன்று இரு ஏரிகளில் இருந்து விநாடிக்கு முறையே 10 மற்றும் 17 கன அடி நீர், குடிநீருக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், 22 கல்குவாரிகளில் இருந்து தினமும் 3 கோடி லிட்டர், நெய்வேலி சுரங்கத்தில் இருந்து 7 கோடி முதல் 8 கோடி லிட்டர் தண்ணீர்
நெம்மேலி மற்றும் மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து தலா 10 கோடி லிட்டர் வீதம் நீர் எடுக்கப்பட்டு வருகிறது. போரூர் ஏரியிலிருந்து தினமும் 40 இலட்சம் லிட்டர் வீதம் குடிநீர் விநியோகம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.