வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காவல் உதவி ஆணையருக்கு பிடிவாரண்டு - நீதிபதி குமாரசிவம் அதிரடி உத்தரவு...
ஈரோடு
ஈரோட்டில் இளைஞர்களிடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் உயிரிழந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காவல் உதவி ஆணையருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி குமாரசிவம் உத்தரவிட்டார்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே திகினாரை கிராமத்தில் உள்ள மல்லிகார்ஜுனா கோவிலில் கடந்த 2010–ஆம் ஆண்டு தெப்பத்தேர் திருவிழா நடைபெற்றது.
அப்போத, அங்குள்ள குளத்தில் தெப்பத்தேர் இழுத்தபோது கிராமத்து இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் குளத்தில் விழுந்ததில் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி சுரேஷ்குமார் (28) என்பவர் இறந்தார்.
இதுதொடர்பாக அப்போது தாளவாடி காவல் ஆய்வாளராக இருந்த தங்கவேல் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டார். இந்த வழக்கு சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தங்கவேல் பதவி உயர்வு பெற்று திருப்பூர் தெற்கு காவல் உதவி ஆணையராக பதவி ஏற்றார்.
இளைஞர் உயிரிழந்த வழக்கில் ஆஜராகுமாறு தங்கவேலுவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.
இதனைத் தொடர்ந்து நீதிபதி குமாரசிவம், வழக்கில் ஆஜராகாத திருப்பூர் காவல் உதவி ஆணையர் தங்கவேலுவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்டார்.