காவலாளிக்கு கட்டையால் சரமாரி தாக்கு; நால்வரில் ஒருவர் கைது; தலைமறைவான மூவருக்கு வலைவீச்சு...
அரியலூர்
புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் கட்டிடத்தின் அருகில் சாராயம் குடித்தவர்களை தட்டிக் கேட்ட அந்தக் கட்டிடத்தின் காவலாளியை தாக்கிய நால்வரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள மூவரை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், செயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் பிச்சைபிள்ளை (55). இவர் செயங்கொண்டம் எம்.எல்.ஏ. இராமஜெயலிங்கம் புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் கட்டிடத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் காவல் பணியில் ஈடுபட்டிருந்தப்போது அங்கு செயங்கொண்டத்தை சேர்ந்த ராமு மகன் தினேஷ்வரன் (22), குருநாதன் மகன் சதீஷ்அரவிந்த் (27), சுப்பிரமணியன் மகன் அரவிந்த் ராஜ் (26), குணா மகன் விஜய் (25) ஆகிய நால்வரும் அந்தப் பகுதியில் வந்து சாராயம் குடித்துள்ளனர்.
இதனைப் பார்த்த காவலாளி பிச்சை பிள்ளை இங்கு வந்து ஏன் குடிக்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அதற்கு அதைக் கேட்க நீ யார்? என்று அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த அந்த நால்வரும் சேர்ந்து பிச்சை பிள்ளையை திட்டி கட்டையால் சரமாரிய அடித்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த பிச்சைபிள்ளையை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் செயங்கொண்டம் காவல் உதவி ஆய்வாளார் ராஜூவ் காந்தி வழக்குப்பதிந்து தினேஷ்வரனை கைது செய்தனர். அவரிடம் விசாரணையும் நடந்து வருகின்றது.
மேலும், இதில் தொடர்புடைய சதீஷ் அரவிந்த், அரவிந்த் ராஜ், விஜய் ஆகிய மூவரையும் காவலாளர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.