பரபரப்பு..!கெட்டுப்போன முட்டையை சாப்பிட்ட 20 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்..மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பள்ளியில் வழங்கப்பட்ட கலாவதியான முட்டையை சாப்பிட்ட 20 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிதம்பரம் அருகே அத்தியாநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் உணவு சாப்பிட்ட 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவர்களை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.இதையடுத்து மாணவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் பள்ளி மாணவர்கள் மயக்கம் அடைந்தது குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர்கள் மதிய உணவு சாப்பிடும் பொழுது அவர்களுக்கு அளித்த முட்டை காலாவதியாகி அழுகிப் போய் உள்ளதாக தெரியவந்துள்ளது.இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மத்தியில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.