ஒரு வழியாக வருமானவரி அலுவலகத்துக்கு வந்தார் விவேக் - ஒரு வாரத்திற்கு பிறகு ஆஜர்
தமிழகத்தின் பிரபல மணல் வியாபாரி சேகர் ரெட்டி வருமான வரி துறையினரிடம் சிக்கியதால் உருண்ட முக்கிய தலைகளில் ஒன்றுதான் முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ்.
ராம் மோகன் ராவ் சிக்கியதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது சேகர் ரெட்டி, ராம் மோகன் ராவின் மகன் விவேக்குடன் நடத்திய பண பரிவர்த்தனைகள் தான் காரணமாகும்.
இதனையடுத்து ராம் மோகன் ராவின் வீடு மற்றும் நந்தனம் சேமியர்ஸ் சாலையில் உள்ள விவேக்குக்குச் சொந்தமான தனியார் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது நண்பரும், உயர்நீதிமன்ற வக்கீலுமான அமலநாதன் ஆகியோர் வீடுகளில் வருமான வரித் துறையினர் திடீர் ரெய்டு நடத்தினர்.
அமலநாதன் வீட்டில் இருந்து இருந்து ரூ.9.35 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அவரது டைரி மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்களில் ராம் மோகன் ராவின் மகன் விவேக் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
ராம் மோகன் ராவின் மகன் விவேக் நடத்தி வரும்
விர்டு டெக்னாலஜிஸ்,
புளூ ஓசியன்
பி அண்ட் ஏ சர்வீசஸ்
டிரான்ஸ் எர்த் லாஜிஸ்டிக்ஸ்
ஆகிய 4 கம்பெனிகளும் சேமியர்ஸ் சாலையில் இயங்குகின்றன. இவற்றில் நடத்திய ரெய்டுகளில் பல லேப்டாப்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
முதல் கட்ட ஆய்வில், இந்த கம்பெனிகளில் விவேக் முதலீடு செய்துள்ள பணம், கணக்கில் காட்டப்படவில்லை. இதனால் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
தனது மனைவி பிரசவத்திற்காக ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பதால் தன்னால் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக முடியவில்லை என தொடர்ந்து கூறி வந்தார் விவேக்.
இந்நிலையில் திடீரென வெள்ளிகிழமை மாலை 4.30 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முன் விவேக் ஆஜரானார்.
அங்கு அதிகாரிகளின் பல்வேறு கேள்விகளுக்கு விவேக் பதிலளித்ததாக தெரிகிறது.