இன்று விநாயகர் சதுர்த்தி !! சென்னையில் 3000 இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு !!!
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் 3000 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைத்து பக்தர்கள் வழிபாட்டு வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்தில் உள்ள விநாயகர் கோவில்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு எழில்மிகு தோற்றத்துடன் காட்சி அளிக்கின்றன.
களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய விநாயகர் சிலைகள் மாநிலம் முழுவதும் பல இடங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சிலைகளை வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.
இந்த ஆண்டு சென்னையில் சுமார் 3 ஆயிரம் இடங்களில் போலீஸ் அனுமதியுடன் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று இரவில் இருந்தே விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக தெருக்களில் வைக்கப்பட்டன
விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். சென்னையில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
வழிபாட்டுக்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சென்னையில் நீலாங் கரை பல்கலைநகர், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், காசிமேடு மீன்பிடி துறைமுகப்பகுதி, திருவொற்றியூர், எண்ணூர் கடல் பகுதிகளில் கரைக்கப்பட உள்ளன.
சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு வரும் 31-ந் தேதி மற்றும் செப்டம்பர் 3 ஆம் தேதி ஆகிய நாட்களில் நடத்த போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்..விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் 13 ஆயிரம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.