விழுப்புரம் மாவட்டம் உணவு உற்பத்தியில் முன்னோடியாக விளங்கி வருகிறது - ஆட்சியர் பெருமிதம்...
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம் உணவு உற்பத்தியில் முன்னோடி மாவட்டமாக விளங்கி வருகிறது என்று ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் உயர் தொழில்நுட்ப காய்கறிகள் சாகுபடி குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்து காய்கறிகள் சாகுபடி கையேட்டை வெளியிட்டார். அப்போது அவர், "விழுப்புரம் மாவட்டம் உணவு உற்பத்தியில் முன்னோடி மாவட்டமாக விளங்கி வருகிறது. தோட்டக்கலைத்துறை மூலமாக விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
வளர்ந்துவரும் சூழலில் நாளுக்கு நாள் தரமான மற்றும் சத்தான காய்கறி தேவை அடிப்படையாகிறது. எனவே, காய்கறி சாகுபடிக்கு ஏற்ற மண், அளவான நீர், நேர்த்தியான விதை, நடவு முறை, உர மேலாண்மை, களை நிர்வாகம், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை ஆகியவை இக்கால சூழலுக்கான காய்கறி சாகுபடியை நிர்ணயம் செய்கிறது.
காய்கறி சாகுபடிக்கு உரிய காலத்தில் தேவையான நீர் பாய்ச்சும் முறைகளை கண்டறிந்து அளவான நீரை பாய்ச்சுதல் வேண்டும். உபரிநீர் சில வகையான பயிர்களுக்கு தீமையான விளைவுகளை ஏற்படுத்திவிடும். நீரின் சிக்கன தேவைக்கு நுண்ணீர் பாசனமுறை சிறந்த முறையாகும்.
எனவே, தரமான விதையை விவசாயிகள் தேர்வு செய்து காய்கறி சாகுபடியில் அதிக மகசூல் பெற்று பயனடைய வேண்டும்" என்று அவர் பேசினார்.