மக்கள் சுகாதாரமாக வாழ வழி சொல்கிறார் விழுப்புரம் ஆட்சியர்; கொஞ்சம் என்னனுதான் கேளுங்களேன்...
வீடுகளில் கழிப்பறைக் கட்டிப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் சுகாதாரமாக வாழ முடியும் .
வீடுகளில் கழிப்பறைக் கட்டிப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் சுகாதாரமாக வாழ முடியும் என்றும் தனி நபர் கழிப்பறை கட்டுவதற்கு அரசு தரும் மானியத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் விழுப்புரம் ஆட்சியர் சுப்ரமணி அறிவுறுத்தியுள்ளார்.
ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்று அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1099 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைப்பெற்றது.
காணை ஊராட்சி ஒன்றியம், கொடார் ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர் சுப்ரமணியன் சிறப்புப் பார்வையாளராக பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் தீர்மானங்கள் எல்லாம் நிறைவேற்றிய பிறகு ஆட்சியர் சுப்ரமணி பேசினார்.
அதில், "வீடுகளில் கழிப்பறைக் கட்டிப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் சுகாதாரமாக வாழ முடியும். தனி நபர் கழிப்பறை கட்டுவதற்கு அரசு மானியமாக ரூ.12 ஆயிரம் வழங்குகிறது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கிராமமும் திறந்தவெளி மலம் கழிக்காத கிராமமாக திகழ வேண்டும். அப்போதுதான் சுகாதாரத்தில் முன்மாதிரியாக விளங்க முடியும்.
இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை அதிகளவில் பொழியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே, வீட்டில் இருக்கும் தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், தென்னை மட்டைகள், டயர்கள் போன்றவற்றை அப்புறப்படுத்துங்கள். இவற்றில் தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் உருவாகி டெங்கு, மலேரியா போன்றவை பரவ வாய்ப்புகள் உண்டு. எனவே, பொதுமக்கள்தான் தங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும், 18 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். குழந்தைத் திருமணத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். குழந்தைத் திருமணம் இல்லாத கிராமங்களை உருவாக்க வேண்டும்" என்று பேசினார்.