Villagers who live without drinking for a month 2 hours traffic impact on the picket

நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில் ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் இல்லாததால் பாதிக்கப்பட்ட மக்கள குடிநீர் கேட்டு வெற்றுக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியம் மேலவாழக்கரை கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

இந்தக் கிராமத்துக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின்மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் கடந்த பல வாரங்களாக மேலவாழக்கரை கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லையாம். இதனைத் தொடர்ந்து மேலவாழக்கரை கிராம பொதுமக்கள் நேற்று முன்தினம் மேலப்பிடாகை - திருக்குவளை சாலையில் வெற்றுக் குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதிமணி, பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, "மேலவாழக்கரை கிராமத்துக்கு கடந்த ஒரு மாதகாலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிக்க தண்ணீர் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே, உடனே குடிநீர் வழங்க வேண்டும்" என்ற கோரிக்கையை பொதுமக்கள் முன்வைத்தனர். 

இதனைத் தொடர்ந்து, "குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். 

இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். 

இந்த மறியலால் மேலப்பிடாகை - திருக்குவளை சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.