அரசுக்கு எதிராக தீர்மானம் போட சொன்ன மக்கள்; அதிகாரிகள் மறுத்ததால் கிராம சபைக் கூட்டம் புறக்கணிப்பு...
வேலூரில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் அரசுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றுமாறு பொதுமக்கள் கோரினர். ஆனால், அதற்கு அதிகாரிகள் மறுத்தவிட்டனர்.
வேலூரில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் அரசுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றுமாறு பொதுமக்கள் கோரினர். ஆனால், அதற்கு அதிகாரிகள் மறுத்தவிட்டனர். இதனால் கிராம சபைக் கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
சுதந்திர தினமான நேற்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, வேலூர் மாவட்டம், வாலாஜாப்பேட்டை வட்டம், நவ்லாக் ஊராட்சி மன்றத்தின் வளகாத்தில் நேற்று கிராம சபைக் கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் புளியங்கண்ணு கிராம மக்கள் பங்கேற்க வந்தனர். அவர்கள், "பாலாற்றில் அரசு மணல் குவாரி அமைத்தால் மேல்விஷராம், இராணிப்பேட்டை, வாலாஜாப்பேட்டை போன்ற நகராட்சிகள் மற்றும் வேலூர் மாநகராட்சி சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் மற்றும் பாசன நீர் ஆதாரம் பாதிக்கப்படும். அதனால், அரசு மணல் குவாரி அமைப்பதைத் தடுக்க அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்று தெரிவித்தனர்.
ஆனால், இம்மக்களின் கோரிக்கையை அதிகாரிகள் ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் அ.தி.மு.க. கிளைச் செயலாளர் நாகேஷ், பொருளாளர் பழனி, தி.மு.க. நிர்வாகி இராஜேந்திரன் மற்றும் அனைத்துக் கட்சியினரும் கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்தனர். கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மக்களின் ஆவேசத்தைப் பார்த்து அதிகாரிகள் ஆடிபோனார்கள். உடனே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கமலக்கண்ணன் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதுமட்டுமின்றி, மக்களின் கோரிக்கை படியே மணல் குவாரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், கிராம சபைக் கூட்டம் தொடர்ந்து நடைப்பெற்றது.