Village assistants hunger strike in Erode to emphasize various demands ...
ஈரோடு
அரசு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியத்தை வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் கிராம உதவியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கு, அரசு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும்.
கிராம உதவியாளர்களுக்கு ஓய்வுபெறும் கடைசி மாத ஊதியத்தின் அடிப்படையில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும்.
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வழங்குவதைபோல் சதவீத அடிப்படையில் பொங்கல் போனஸ் ரூ.3500 கொடுக்க வேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட மையம் சார்பில் ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு சங்க மாவட்டத் துணைத் தலைவர் ஏசையன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கர்பாபு, செயலாளர் புஸ்பராகு ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
இந்தப் போராட்டத்தில் கிராம உதவியாளர் சங்க மாநில தலைவர் ஆர்.ராஜசேகர், மாவட்ட பொருளாளர் அன்புரோஸ் மற்றும் ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், பவானி, அந்தியூர், கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கிராம உதவியாளர்கள் பலர் பங்கேற்று தங்களது போராட்டத்திற்கு வலுசேர்த்தனர்.
