நீலகிரியில் கிராம நிர்வாக அலுவலர்கள் நான்காவது நாளாக உள்ளிருப்புப் போராட்டம்...
நீலகிரி
நீலகிரியில் கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கொண்டுள்ள உள்ளிருப்புப் போராட்டம் நான்காவது நாளாக தொடர்ந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வருவாய்க் கோட்டத்தில் உள்ள பந்தலூர் வருவாய் வட்டம் நெலாக்கோட்டை கிராமத்தில் உள்ள பிரிவு 17 நிலத்தில் மரம் வெட்டப்பட்டது. இது தொடர்பாக அந்த கிராம நிர்வாக அலுவலர் மதன்குமார் கடந்த 23-ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து, கூடலூர், பந்தலூர் வருவாய் வட்டங்களிலுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் கூடலூர் வட்டாட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில், "பணியிடை நீக்க உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்" என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். இவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாத காரணத்தால் போராட்டம் நான்காவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.