சுரங்க விரிவாக்கத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு - என்.எல்.சி. அதிகாரிகள் தாக்கப்பட்டதால் பரபரப்பு
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் நிலக்கரி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தச் சென்ற என்.எல்.சி. அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.விருதாச்சலம் அடுத்த ஊ.ஆதனூர் கிராமத்தில் தான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
என்.எல்.சி. நிலக்கரி சுரங்கத்தின் எல்லையை விரிவுபடுத்துவற்காக ஆதனூர் கிராமத்தில் ஏற்கனவே நிலம் தேர்வு செயப்பட்டிருந்தது. இந்நிலத்தை முழமையாக கையகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.இதற்காக சுமார் 5 க்கும் மேற்பட்ட வாகனங்களில் என்.எல்.சி.நிறுவன அதிகாரிகள் இன்று ஆதனூர் சென்றிருந்தனர்.
இதற்கிடையே நிலம் கையகப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மக்கள் அதிகாரிகளின் வாகனங்களை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது ஏற்பட்ட களோபரத்தில் அந்தப் பெண் மயக்கமடைந்தார். ஆனால் அவர் உயிரிழந்ததாக கருதிய பொதுமக்கள் அதிகாரிகள் மீதும், வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்த அதிகாரிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.