Velmurugan arrested again in hospital this time he talked against the government ...

கடலூர்

ஆர்ப்பாட்டம் ஒன்றில் அரசுக்கு எதிராக பேசியதாக கூறி தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனை கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் 10–ஆம் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பல்வேறு தமிழ் தேசிய அமைப்புகளுடன் சேர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் பேரணி மேற்கொண்டனர். 

அவர்கள் பேரணியாக வந்து நெய்வேலி கியூ பாலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய வேல்முருகன் மீது அரசுக்கு எதிராக பேசியதாக நெய்வேலி தெர்மல் காவலாளார்கள் வழக்குப்பதிந்தனர்.

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேல்முருகன், உடல்நலம் சரியில்லாததால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், தெர்மல் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ராமதாஸ், அரசுக்கு எதிராக பேசிய வழக்கில் நேற்று மருத்துவமனையில் வைத்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை கைது செய்தார்.

கைது நடவடிக்கை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் கேட்டபோது, "என்.எல்.சி. நிறுவனத்தை அனுமதியின்றி முற்றுகையிட சென்றதாகவும், அரசுக்கு எதிராக பேசியதாகவும் கூறி வேல்முருகன் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதியப்பட்டது. இந்த வழக்கில் தற்போது வேல்முருகன் கைதாகி இருக்கிறார்" என்று அவர் தெரிவித்தார்.