கோயம்பேடு மார்கெட்டையும் விட்டு வைக்கவில்லை கனமழை! காய்கறி விலையில் சரிவு!
கனமழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலைகள் குறைந்துள்ளன. கடந்த ஒரு வாரகாலமாக பெய்து வரும் கன மழையால் காய்கறி விற்பனை மந்தமாகவே இருந்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரகாலமாக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாகி உள்ளன. பல சாலைகளில் போக்குவரத்து முடங்கியுள்ளது.
மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். பொதுமக்கள் யாரும் வெளியில் வராததால், சில்லறை காய்கறி விற்பனை மற்றும் தெருவோர காய்கறி கடைகளில் வியாபாரம் மந்தமாக உள்ளது. அதேபோல் சில ஓட்டல்களும் மூடப்பட்டன. சென்னையில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகள் மழை காரணமாக மூடப்பட்டதே காரணம் என்று கூறுகின்றனர். காய்கறி மார்கெட் கடந்த 4 நாட்களாக திறக்கவில்லை. வியாபாரிகள், கோயம்பேடு சென்றும் காய்கறிகள் வாங்கவில்லை. இதனால், கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கடந்த ஒரு வாரமாக விற்பனை மந்தமாக இருந்தது. இதனால், காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.
கனமழை காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகள் வரத்து குறைந்தது. ஆனாலும், காய்கறிகள் வீணாகி கீழே கொட்டும் நிலை ஏற்படவில்லை என்று கோயம்பேடு வியாபார நல சங்கம் கூறியுள்ளது. தமிழகத்தில் மழை தற்போது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால்
கோயம்பேடு காய்கறி சந்தையில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்றைய விலைப்படி தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. (கடந்த வார விலை அடைப்பு குறிக்குள்) இது கடந்த வாரம் 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெங்காயம் ரூ.30 (36), சாம்பார் வெங்காயம் ரு.110 (110), கத்தரிக்காய் ரூ.30 (35), உருளைக்கிழக்கு ரூ.15 (16), அவரைக்காய் ரூ.50 (70), வெண்டைக்காய் ரூ.16 (18), முள்ளங்கி ரூ.25 (40), பாகற்காய் ரூ.20 (20), பீன்ஸ் ரூ.45 (60), முட்டைக்கோஸ் ரூ.25 (28), கேரட் ரூ.55 (55), பீட்ரூட் ரூ.35 (35), புடலங்காய் ரூ.15 (15), முருங்கைக்காய் ரூ.60 (70), பச்சை மிளகாய் ரூ.28 (28) என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் மக்கள் வெளியே வரத் துவங்கியுள்ளனர். இதனால், தி.நகர், மயிலாப்பூர், வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு காய்கறி மார்க்கெட்டுகள் திறக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற காய்கறி மார்கெட்டுகளில் மக்கள் அதிகளவில் காணப்படுகின்றனர்.