Veerat Kohli says Indian soldiers have a knife on their necks

வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவில் விளையாடும்போது சரியாகச் செயல்படவில்லை என்றால் அவர்களால் இயல்பாகத் திரும்பிச் செல்ல முடிகிறது. ஆனால், இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் சிறப்பாகச் செயல்படவில்லை என்றால் கழுத்தில் கத்தி வைக்கப்பட்டுள்ளதைப் போன்று உணரப்படுகிறது என்று வீராட் கோலி தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.

இதில் நடப்புச் சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், இதுகுறித்த கேள்விக்கு இந்திய கேப்டன் விராட் கோலி மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியது:

“ஒரு கிரிக்கெட் வீரராக களத்தில் பேட்டிங் செய்யும்போது, எதிர்முனையில் இருக்கும் எனது பார்ட்னரைப் பற்றி கூட சிந்திக்க இயலாது. இது முழுக்க முழுக்க விளையாட்டைப் பற்றியதாகும்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டியானது ரசிகர்களுக்கு எப்போதும் ஆர்வத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. அவர்களைப் பொருத்த வரையில் இந்த ஆட்டம் என்பது வித்தியாசமானது. எங்களைப் பொருத்த வரையில் இதுவும் வழக்கமான கிரிக்கெட் ஆட்டமே.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் என்பதால் எங்கள் மனதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியாவுக்காக விளையாடும்போது நமக்கு தனியே ஊக்குவிப்பு என்பது தேவையில்லை. அது இயல்பாகவே ஏற்படும்.

துணைக் கண்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களைப் பொருத்த வரையில், தோல்வி என்பது ஏன் எப்போதும் வாழ்வா? சாவா? என்பதைப் போல பார்க்கப்படுகிறது எனத் தெரியவில்லை.

ஒரு கிரிக்கெட் வீரராக ஒவ்வொரு தொடரின்போதும் மேம்பட முடியும் என உணர்கிறேன். சில வேளைகளில் ஒரு சில தொடர்கள் வாழ்வா, சாவா? நிலையில் இருப்பதைப் போன்று சுற்றியிருக்கும் சூழ்நிலைகள் தோற்றத்தை ஏற்படுத்தும். ஆனால், நமது மனதில் அத்தகைய எண்ணம் இருக்காது.

துணை கண்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இதனை உணர முடியும். இது ஏன் எனத் தெரியவில்லை.

வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவில் விளையாடும்போது சரியாகச் செயல்படவில்லை என்றால் அவர்களால் இயல்பாகத் திரும்பிச் செல்ல முடிகிறது. ஆனால், இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் சிறப்பாகச் செயல்படவில்லை என்றால் நமது கழுத்தில் கத்தி வைக்கப்பட்டுள்ளதைப் போன்று உணரப்படுகிறது. இதில் எனக்கு நம்பிக்கை இல்லை” என்று விராட் கோலி கூறினார்.