வேகமாக நிரம்பி வரும் வீராணம் ஏரி !! 2 நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்பு !!!
தொடர் மழை காரணமாக காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இன்று மாலைக்குள் அதன் முழு கொள்ளளவான 47 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது வீராணம் ஏரி. இதன் மூலம் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.மேலும் இங்கிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு விநாடிக்கு 1,200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரியலூர், பெரம்பலூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் இருந்தும் செங்கால் ஓடை மூலம் விநாடிக்கு 600 கனஅடி நீர் வருகிறது.
ஏரியின் முழுக் கொள்ளளவு 47.50 அடியாகும். தற்போது ஏரியின் நீர் மட்டம் 44.60 அடியாக உள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் ஏரி முழுக் கொள்ளளவை எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.