பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் காத்திருக்கும் போராட்டம்...
தூத்துக்குடி
40 சதவீதம் ஊனமுள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காலையில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு சங்க மாநில தலைவர் நம்புராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முத்துகாந்தாரி, தலைவர் ஜெபஸ்டின்ராஜ், துணை செயலாளர் சாலமன்ராஜ், புவிராஜ், நகர செயலாளர் சக்கரையப்பன்,
ஒன்றிய தலைவர் முத்துமாலை, வீரையா, அந்தோணிராஜ், கருப்பசாமி, பூபதி, திருப்பதி, பாலகிருஷ்ணன், மணிகண்டன், செல்வகுமார், கண்ணன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
இந்தப் போராட்டத்தில், "40 சதவீதம் ஊனம் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும்.
உதவித் தொகை பெற அரசாணை பெற்றும், வழங்கப்படாமல் உள்ள உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும்.
உதவித் தொகை பெற விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் விவர சீனியாரிட்டி பட்டியலை தாலுகா அலுவலகத்தில் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும் என்ற அரசு உத்தரவை அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பின்பற்ற வேண்டும்.
உதவித் தொகை பெற்று வந்த மாற்றுத் திறனாளிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும்.
மாதந்தோறும் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி குறைதீர்க்கும் முகாம் நடத்த வேண்டும் என்ற அரசாணையை அமல்படுத்த வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டன.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், உதவி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சூர்யகலாவிடம் கோரிக்கை மனு வழங்கிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.