காவிரிக்காக கைகோர்த்த பல்வேறு கல்லூரி மாணவர்கள்; ஆற்றுக்குள் இறங்கி போராடியதால் பதற்றம்...
தஞ்சாவூர்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தஞ்சையில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் ஆற்றுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
மாணவர்கள் அமைப்பினர், விவசாய சங்கத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர், பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், நேற்று தஞ்சையில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தஞ்சை இர்வின் பாலம் அருகே திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அருகில் இருந்த கல்லணைக்கால்வாய் எனப்படும் புது ஆற்றுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் ஆற்றின் கரையிலும் அமர்ந்து முழக்கங்களை எழுப்பி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களை வெளியே வருமாறு கூறினர். ஆனால், அவர்கள் வரமறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் இயக்க நகர செயலாளர் ஜான் உள்பட 32 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.