சென்னையை மிரட்டும் வர்தா புயல் : 100 கிமீ வேகத்தில் பயங்கர காற்று வீசும்
வங்கக் கடலில் உருவாகியுள்ள வர்தா புயல், சென்னையை நோக்கி தீவிரமாக நகர்ந்து வருகிறது. இந்த வர்தா புயல் நாளை சென்னையை ஒட்டியே கரையை கடக்கும் என்பதால் கடந்த ஆண்டைப் போல, மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையை மிரட்டும் இந்த வர்தா புயல் கடந்த 50 ஆண்டுகளில் சென்னையை ஒட்டி கரையை கடக்கும் 5வது புயல் என கூறப்படுகிறது. இப்புயல்சென்னை மெரினா மற்றும் திருவான்மியூர் இடையே நாளை கரையை கடக்கும் என்றும், அப்போது சென்னை உள்பட தமிழகத்தின் கடலோர மற்றும் வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வர்தா புயல் கரையை கடக்கும் போது 100கி.மீ வேகத்தில் காற்று வீசும் அபாயம் உள்ளது என்றும் இன்று இரவு தொடங்கி, அடுத்த சில நாட்களுக்கு தொடர்ச்சியாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே வர்தா புயலை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.சென்னை, திருவள்ளூர்,மாமல்லபுரம் ஆகிய பகுதிகளுக்கு பேரிடர் மீட்புப்படை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது. எண்ணர் துறைமுகத்தில் 10 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கு சிறப்பு குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மின்சார வயர்கள் அறுந்து திடக்க வாய்ப்புள்ளதால் பொது மக்கள் கவனமாக நடந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்,
ரேடியோ, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் வெளியிடப்படும் அதிகாரப் பூர்வமான செய்திகளை மட்டுமே நம்ப வேண்டும் என பொதுமக்களுக்கு தெசிவிக்கப்பட்டுள்ளது.